அட்டாளைச் சேனை தாக்குதல் சம்பவம்; அமைச்சருக்கும் பொலிஸ் அதிகாரிக்கும் தொடர்பு! ரவூப் ஹக்கீம் குற்றச்சாட்டு
இலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச் சேனையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். அதாவுல்லாவும், அம்பாறை பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சர் பிரேமலால் ரனகலாவும் செயற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கல்முனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தமது ஆதரவாளர்களுக்கும், அதாவுல்லாவின் ஆதரவாளர்களுக்கும் இடையில் கல்முனையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இப்தார் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தாம் சென்று கொண்டிருந்த போது அதாவுல்லாஹ்வின் ஆதரவாளர்கள் தம்மை தடுத்து, திருப்பி அனுப்பியதாகக் குற்றம் சமத்தியுள்ளார்.
இதற்கு முன்னரும் கல்முனையில் வைத்து தமது பயணத்தை ஆதாவுல்லாஹ்வின் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பிரதிக் காவல்துறை மா அதிபரிடம் முறைப்பாடு செய்ததாகவும் இது தொடர்பில் காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டாவது தடவையாகவும் தம்மை தடுத்தாகவும் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் திட்டமிட்டு இவ்வாறு தமது பயணத்திற்கு தடை ஏற்படுத்தியதாகவும் ஹக்கீம் குற்றம் சுமத்தியுள்ளார்.
அமைச்சர் அதாவுல்லா நீர்ச் சபையின் சொகுசு விடுதியில் தங்கியிருந்து, தமக்கு எதிரான தாக்குதல்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
தாம் அட்டாளைச்சேனைக்குள் பிரவேசித்தால் தாக்குதல் நடத்துமாறு அமைச்சர் அதாவுல்லாஹ் துண்டு பிரசூரங்களை வழங்கியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சூழ்ச்சித் திட்டத்தின் பின்னணியில் காவல்துறையினரும் செயற்பட்டுள்ளனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறை மா அதிபர் மற்றும் தேர்தல் ஆணையாளருக்கு முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

























கருத்துக்களேதுமில்லை